கிழக்கு மாகாண திறன் மதிப்பீட்டு விருது – 2025 வழங்கும் விழாவில்; காத்தான்குடிக்கு மூன்று விருதுகள்.!!!
— எம்.ரி.எம். யூனுஸ் —
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண திறன் மதிப்பீட்டு விருது – 2025 வழங்கும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (28) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கி. இளம் குமுதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் செயல்பட்டு வரும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் சமூக சேவைகளின் தரத்தை அடிப்படையாகக் கொண்டு, மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கு இவ்விழாவில் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நினைவுப் பரிசுகள் மற்றும் பாராட்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷான் அக்மீமன, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஹேமந்த குமார், மாகாண அமைச்சின் செயலாளர், திணைக்களங்களின் செயலாளர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விருது வழங்கும் நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 167A பதுரியா மாதர் அபிவிருத்திச் சங்கம், பிரதேச மட்டத்தில் முதல் இடத்தையும், மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டதோடு, புதிய காத்தான்குடி 167C கிராம அபிவிருத்திச் சங்கம் பிரதேச மட்டத்தில் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்வில் கிராம மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான மாநாடு இடம்பெற்றதோடு, பரிசளிப்பு நிகழ்வில், வெற்றி பெற்ற சங்கங்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












