வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகள்: பெப்ரவரி முதல் மீண்டும் ஆரம்பம்.!!!
வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை மறுதினம் (01) முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எனினும், இம்முறை குறித்த பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடைமுறை முன்னெடுக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தமது வீட்டிற்குரிய செல்லுபடியான வாக்காளர் பெயர் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய பெயர்கள் தொடர்பான தகவல்களை, சம்பந்தப்பட்ட கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த திருத்த நடவடிக்கை இரண்டு மாத காலத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் உரிய தகவல்களை உள்ளடக்கிய பெயர் பட்டியல் காட்சிப்படுத்தல், உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்த அறிவித்தல் வெளியாகி 28 நாட்களுக்குள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு திருத்தத்தின் போது தகைமைகளைப் பூர்த்தி செய்திருந்தும், ER படிவத்தின் மூலம் பெயரை உள்ளடக்க முடியாமல் போன நபர்களுக்கு, இந்தக் காலப்பகுதியில் உரிமைகோரல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலுக்குத் தகுதியற்ற ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தால், அதற்கெதிராக ஆட்சேபனை தெரிவிக்கவும் இந்தக் காலப்பகுதியில் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, சம்பந்தப்பட்ட பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடமிருந்தோ அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.