கல்விச் சீர்திருத்தங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை: பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.!!!
கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் மாற்றங்களிலிருந்து ஒரு அடியையும் பின்வைக்கப் போவதில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
புத்தளம் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுடன் இன்று (17) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து கல்விச் சீர்திருத்தத் திட்டங்களும் திட்டமிட்டபடியே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த கல்விச் சீர்திருத்தத் திட்டங்கள் நீண்டகால அடிப்படையில் இலக்குகளை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதற்காக உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு, ஆசிரியர் மற்றும் அதிபர் ஆட்சேர்ப்பு, டிஜிட்டல் தொழில்நுட்ப உபகரணங்கள் விநியோகம் ஆகியவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய பாரிய மாற்றச் செயல்பாடுகளின் போது, சில குழுக்கள் தங்களின் குறுகிய நோக்கங்களை அடைவதற்காக முன்வைக்கும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாது, அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையைத் தொடர்ந்தும் பேணுவது அவசியமாகும். இது பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மற்றும் முழு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய செயல்பாடாகும்.
இதனிடையே, கல்வி மாற்றச் செயல்பாட்டின் விசேட திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் கல்வி உபகரணங்களாக, ஊடாடும் தொடுதிரைகள் (Interactive Screens) மற்றும் இணைய இணைப்புகள் ஆகியவை, முதற்கட்டமாக முதல் இரண்டு மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளன” என பிரதமர் தெரிவித்தார்.