கடலில் நீராடச் சென்ற இளைஞர் பலி – ஒருவர் மீட்பு.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்-
மாரவில – தல்வில முகத்துவாரப் பகுதிக்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன், மற்றொருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச்சம்பவம் திங்கட்கிழமை (23) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் வலிபென்ன, துனகதெனிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய வர்ணகுலசூரிய ரமேஷ் தருக்க டில்ஷ திசேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், அக்குரஸ்ஸ, லேனவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய விக்கிரமசிங்க மலே பத்திரனகே ஜீவக சமந்தா கடலில் இருந்து மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாரவில – தல்வில பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர சுற்றுலா ஹோட்டலில் பணிபுரிந்து வந்த இந்த மூன்று இளைஞர்களும், சம்பவ தினமான திங்கட்கிழமை கடலில் நீராடச் சென்றுள்ளனர்.
அவர்கள் நீராடிக்கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட பலமான நீரோட்டத்தில் சிக்கி இருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையை அவதானித்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, இருவரையும் கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனைக்கு அனுப்பினர். எனினும், ஒருவரை உயிருடன் காப்பாற்ற முடியாமல் போனது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞனின் சடலத்திற்கு மரணப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக தொடுவாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
