அரச உத்தியோகத்தர்கள் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்து; பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.!!!
(கற்பிட்டி – நிருபர் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் அனர்த்த நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில், ஆலங்குடா மற்றும் நிர்மல்புர கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவத்தையும், கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளையும் கண்டித்து, திங்கட்கிழமை (22) கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட கற்பிட்டி பிரதேச செயலகத்தின் அனைத்து பிரிவுகளின் அலுவலர்களும் இணைந்து சுமார் 30 நிமிடங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம சேவையாளர் பிரிவுகளில் அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வந்த கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பல்வேறு எதிர்ப்பலைகள், கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் கடமையாற்றி வந்த நிலையில், ஆலங்குடா மற்றும் நிர்மல்புர கிராம சேவையாளர் பிரிவுகளில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவர் தாக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (19) முதல் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் பணியாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அனர்த்த நிவாரணம் தொடர்பான அனைத்து வேலைத்திட்டங்களிலிருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தனர். இந்த அனர்த்த நிவாரண பணி புறக்கணிப்பு திங்கட்கிழமை (22) தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஊடாக, அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பது, அச்சுறுத்தல் விடுப்பது மற்றும் தாக்குதல் நடத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தி தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



