மலிங்காவின் தேடலில் மின்னிய மட்டக்களப்பு இளைஞர்: 126 கி.மீ வேகத்தில் பந்து வீசி கவனம் ஈர்ப்பு.!!!
முன்னாள் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க முன்னெடுத்துள்ள நாடளாவிய ரீதியிலான வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறியும் முயற்சியில் மட்டக்களப்பைச் சேர்ந்த அழகராஜ் லதர்ஷன் தனது திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நாடு முழுவதும் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறிய வெளியிடப்பட்ட திறந்த அழைப்புக்கு 3500க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 350 பேர் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் தேர்வுகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
முதல் குழுவிற்கான தேர்வுகள் இன்று (14) கொழும்பிலுள்ள சுகததாச மற்றும் ஆர் பிரேமதாச மைதானங்களில் நடைபெற்றன.
இந்தத் தேர்வுகளில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி சிறந்த திறமையாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மலிங்கா, “இதுவரை நமக்குக் கிடைத்த வேகமான பந்து வீச்சாளர் மட்டக்களப்பில் இருந்து வந்துள்ளார். அவர் தற்போது 126 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். முறையான பயிற்சி வழங்கப்பட்டால் எதிர்காலத்தில் அவர் தனது வேகத்தை மேலும் அதிகரிக்கும் திறன் கொண்டவர் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், இளைஞருக்கு தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு உடல் தகுதியை மேம்படுத்தி இன்னும் வேகமாக பந்து வீச வேண்டும் எனவும் மலிங்கா வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
