சிறையில் உள்ள இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை: புதிய சிறைக்கு மாற்ற அரசு முடிவு.!!!
ஊழல் வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ள இம்ரான் கான் அவர்களின் உடல்நிலை குறித்து கவலையளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு வலது கண்ணில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்த்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ரத்த உறைவு காரணமாக இம்ரான் கானுக்கு வலது கண்ணில் தற்போது 15 சதவீத பார்வை மட்டுமே உள்ளதாகவும், சிறை அதிகாரிகள் முறையான சிகிச்சை வழங்காத அலட்சியத்தால் 85 சதவீத பார்வை இழந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இம்ரான் கானின் உடல்நிலையை ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மோஷின் நக்வி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், இம்ரான் கான் விரைவில் இஸ்லாமாபாத் சிறைக்கு மாற்றப்படுவார் என தெரிவித்தார்.
“இஸ்லாமாபாத்தில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய சிறைச்சாலை கட்டப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் பணிகள் நிறைவடைந்ததும், இம்ரான் கான் அங்கு மாற்றப்படுவார். அவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் என்பதால், தலைநகர் சிறையிலேயே அடைக்கப்படுவார்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி, அவரது கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தான் நாடாளுமன்றம் அருகே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“இம்ரான் கானை உடனடியாக அல்-ஷிபா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது,” என அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.