சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு: இன்று இலங்கை வருகை.!!!
‘டிட்வா’ (Ditwa) புயலினால் இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22) நாட்டிற்கு வருகை தந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, புயல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மற்றும் மனிதாபிமான பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராய்வதும், அதனுடன் தொடர்புடைய விடயங்களில் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதும் இவ்விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.
இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ள குறித்த பிரதிநிதிகள் குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடன் சந்திப்புகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘டிட்வா’ புயலால் உருவான சவால்களை இலங்கை எவ்வாறு எதிர்கொண்டு கையாள்ந்துள்ளது என்பதை மதிப்பீடு செய்வதுடன், உட்கட்டமைப்பு வசதிகள், மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் மீது ஏற்பட்டுள்ள தாக்கங்களை புரிந்து கொள்வதிலும் இந்த குழு கவனம் செலுத்தவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதியின் (Extended Fund Facility) ஐந்தாவது மீளாய்வு சமீபத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான இறுதி அனுமதியை வழங்குவது தொடர்பாகவும் இந்த விஜயத்தின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.