‘டித்வா’ புயல் பாதிப்பு: வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.50 இலட்சம் நிவாரணம் – அமைச்சர் அறிவிப்பு.!!!
‘டித்வா’ புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள 50 இலட்சம் ரூபா நிவாரண கொடுப்பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்கத் தொடங்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அனர்த்தம் ஏற்பட்ட ஒரு மாதம் நிறைவடைவதற்கு முன்னரே, புயலால் சேதமடைந்த வீதிகளில் 99 சதவீதமானவற்றை புனரமைத்து முடிக்க அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், முற்றாக வீடுகளை இழந்த குடும்பங்கள், ஒரு வருடம் முடிவதற்குள் தமக்கென புதிய வீடுகளை அமைத்துக்கொள்ள தேவையான முழுமையான உதவிகளை வழங்குவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும், தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய நஷ்டஈடு இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை என குற்றம் சுமத்துகின்றனர்.
கடந்த அனர்த்தத்தின் போது மகமன்கடவல குளம் பெருக்கெடுத்ததன் காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய தமது வீடுகளுக்கு, இதுவரை ரூ.25,000 அடிப்படை நஷ்டஈடு கூட வழங்கப்படவில்லை என மஹமன்கடவல கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வெள்ளம் காரணமாக அந்தப் பகுதியில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.