நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்.!!!
நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் நாளை (31) காலை 8.00 மணி முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
எந்தவித கலந்தாலோசனையும் இன்றி அரசியல் நோக்கங்களுக்காக சட்டவிரோதமான முறையில் வைத்தியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய, தற்போது வைத்தியர் இடமாற்றங்களுக்காக பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னர் ஒருபோதும் இவ்வாறான நடவடிக்கை இடம்பெற்றதில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் விருப்பமின்றி நாளை காலை 8.00 மணி முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இந்த வேலைநிறுத்தத்தைத் தடுக்க வேண்டுமானால் நாளை (31) காலை வரை அவகாசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அவசர சிகிச்சை சேவைகள் வழமை போல் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.