டிட்வா சூறாவளி பாதிப்பில்: காணாமல் போன 203 பேருக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்க அரசின் தீர்மானம்.!!!
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 203 நபர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
இக்கட்டான சூழ்நிலை காரணமாக இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஒருவரின் தகவல் எதுவும் கிடைக்காத பட்சத்தில், அவரை இறந்தவராக அறிவிக்கச் செயற்படும் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு டிசம்பர் 2ஆம் திகதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பதிவாளர் நாயக சசிதேவி ஜலதீபன் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் இழப்பீட்டு நிதி பெறும் செயல்முறையை விரைவுபடுத்தும் எனவும் அவர் கூறினார்.
காணாமல் போன ஒருவர் குறித்து கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்தியவுடன், அந்த நபருக்கான மரணச் சான்றிதழை வழங்க மாவட்ட பிரதிப் பதிவாளர் அதிகாரம் பெறுவார். ஆட்சேபனைகள் ஏதும் இல்லாத பட்சத்தில், பிரதேச செயலாளர் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். பின்னர், பிராந்திய பிரதிப் பதிவாளர் அல்லது உதவிப் பதிவாளர் நாயகம் மூலமாக அந்த விண்ணப்பம் அதிகாரபூர்வமாக செயலாக்கப்படும்.
அனர்த்தத்தில் உயிரிழந்ததாக இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ள 611 பேரில் 126 பேருக்கு ஏற்கனவே மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளது.