மட்டக்களப்பு குருக்கள்மடம்: மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்.!!!
மட்டக்களப்பு மாவட்டம், குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி தோண்டும் பணிகள் இன்று (01) மாலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்முனை வீதியூடாக புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு காத்தான்குடி நொக்கி பயணித்துக்கொண்டிருந்த 170 முஸ்லிம் மக்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக கருதப்படும், குருக்கள்மடம் கடற்கரையை அண்டிய பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என நீண்டகாலமாக சந்தேகம் இருந்து வந்தது.
குறித்த வழக்கினை விசாரித்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கடந்த மூன்று நாட்களாக அகழ்வுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. சுமார் 6 அடி ஆழம் வரை தோண்டப்பட்டும், மனித உடல் எச்சங்கள் அல்லது தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாகத் தோண்டப்பட்ட இடத்தை மூடுவதற்கும், அகழ்வுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அகழ்வுப் பணிகள் முற்றாக கைவிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் சந்தேகிக்கப்படும் பிற இடங்களை நவீன ஸ்கேன் (Scan) தொழில்நுட்பம் மூலம் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், மேலதிக அனுமதி கிடைக்கும் போதெல்லாம் ஏனைய இடங்களில் அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.