குருக்கள்மடம் மனிதப் புதைகுழி: இரண்டாவது நாளாக அகழ்வு.!!!
1990ஆம் ஆண்டு 170 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் குருக்கள்மடம் பகுதியில் மனிதப் புதைகுழி அகழ்வு பணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று (30) ஆரம்பிக்கப்பட்ட இந்த அகழ்வு நடவடிக்கை அதிகாரிகளின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
1990ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவு செய்து காத்தான்குடி நோக்கி திரும்பியவர்கள் உள்ளிட்ட 170 முஸ்லிம்கள் குருக்கள்மடம் பகுதியில் வழிமறிக்கப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வு ஆரம்பிக்கப்பட்டிருப்பது, இதற்காக நீண்டகாலமாக முயற்சித்து வந்தவர்களுக்கு கிடைத்த ஆரம்ப வெற்றியாக பார்க்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.