உதுமாலெப்பை எம்.பி: கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு.!!!
கிழக்கு மாகாண ஆளுநர், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த உதுமாலெப்பை எம்.பி
கே எ ஹமீட்
மத்திய மலைநாட்டில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளெப்பெருக்கு, சூறாவளி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான பாதுகாப்பான வீட்டுத்திட்டங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை முன்னெடுக்க வேண்டும் என கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ தேசிய சபைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நமது நாட்டில் சுனாமி வந்த பின்பு கடற்கரையோரங்களில் இருந்து 300 மீற்றர் தூரத்திற்கு அப்பால் பொது மக்கள் கட்டிடங்களை நிர்மாணிக்கலாம் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. சில காலம் சென்ற பின் பொது மக்களும், திணைக்களங்களும் சுனாமியின் பாதிப்பினை மறந்து 250 மீற்றர் தூரத்தினை குறைத்து 50 மீற்றராக அடையாளப்படுத்தி உள்ளனர்.
இதேபோன்று தான் சூறாவளி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற நிகழ்வுகளையும் எமது மக்களும் திணைக்களங்களும் மறந்து விடுவதற்கு முன் ஜனாதிபதி அவர்கள் தலைமையில் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை அனர்த்தங்கள் தொடர்பாக நிரந்தர தீர்வுகளை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இப்பிரதேசங்களை வழமையான சூழ்நிலைக்கு கொண்டு வருவதற்கான இயந்திரங்கள் தட்டுப்பாடு நிலவியது இச்சந்தர்ப்பத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி நகர சபை, ஏறாவூர் நகர சபை, பொத்துவில், இறக்காமம், அட்டாளைச்சேனை பிரதேச சபைகளும் ஒன்றிணைந்து பாரிய இயந்திர உபகரணங்களை கம்பளை, கெலிஓயா, வெளிகல்ல, கலுகமுவ உட்பட பல பிரதேசங்களுக்கு கிழக்கு மாகாண மக்களும் வருகை தந்து இச்சந்தர்ப்பத்தில் தங்களால் இயன்ற ஒத்துழைப்பினை வழங்கினர். இவ்விடயத்தில் உதவிய கிழக்கு மாகாண ஆளுநர், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்காலத்தில் இயற்கை அனர்த்தங்கள் நிகழும் போது அவசரமாக பாவிக்கக்கூடிய வகையில் பாரிய இயந்திர தொகுதி ஒன்றினை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். நாங்கள் நேற்று வரை கண்டி மாவட்டத்தில் கம்பளை, கெலி ஓயா, கலுகமுவ, பரண எல்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தோம் இதுவரையும் ஜனாதிபதி அவர்களே இப்பிரதேச மக்களுக்கான ரூ.25,000 யும் ரூ. 50,000 உம் வழங்கப்படவில்லை. என அந்த மக்கள் மிகவும் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் உரிய அதிகாரிகளிடம் கம்பளை பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ரூ. 25,000, 50,000 ஏன் வழங்கப்படவில்லை என்ற விளக்கங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளர் திரு. ஆலோக பண்டாரவிடம் கண்டி மாவட்ட செயலாளரிடம் விபரங்களை கேட்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான ரூ. 25,000 மற்றும் ரூ. 50,000 கொடுப்பனவுகளை ஒரு வாரத்துக்குள் அவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பான வீட்டுத் திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக துறைசார்ந்த விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் சென்ற 2024ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களின் போது லஹுகல, பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்களினால் தனியார் கடைகளில் வாங்கிய பெருந்தொகையான பொருட்களுக்கான பணம் இதுவரையும் செலுத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக சென்ற மாதம் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ தேசிய சபைக் கூட்டத்தில் என்னால் தெரிவிக்கப்பட்டது. லஹுகல பிரதேச செயலகத்திற்கு நிதி மட்டும் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இதுவரையும் பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்களுக்கு நிதி அனுப்பப்படாமல் உள்ளது. இந்த நிலையில் தனியார் கடைச் சொந்தக்காரர்கள் நீதி மன்றம் சென்று பிரதேச செயலாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்களுக்கு மேற்படி கொடுப்பனவினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கினார் in new tittle