காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு: புதிய ஜனாஸா வாகனம் கையளிப்பு.!!!
-எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு, வெளிநாடுகளில் வாழும் காத்தான்குடி சமூகத்தினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஜனாஸா மற்றும் பாரிய நோயாளிகளை ஏற்றிச் செல்லும் சேவை வாகனம் இன்று (03) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
சமூக சேவையை நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள இந்த வாகனம், காத்தான்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவசர தேவையுடைய ஜனாஸாக்களையும் பாரிய நோயாளிகளையும் பாதுகாப்பாக கொண்டு செல்லும் பணியில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தூர நாடுகளில் வாழ்ந்தாலும் தாயகத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் இத்திட்டத்திற்கு உடலாலும் பொருளாதார ரீதியிலும் பங்களிப்பு செய்த கட்டார் (KCQ), சவுதி அரேபியா (KCSA), பிரித்தானியா (KC-UK) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (KCU) அமைப்புகளின் சகோதரர்களுக்கும், தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வரும் ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் பிரதிநிதிகள், உலமாக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்து குறிப்பிடத்தக்கது.






