கல்வி மறுசீரமைப்பில் சிக்கல்களை தீர்க்க புதிய சட்டப் பொறிமுறை – ஜனாதிபதி அறிவிப்பு.!!!
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தும் போது உருவாகியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வி நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய தரப்பினர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய ஒரு பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துடன் (FUTA) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கலந்துரையாடலின் போது, தற்போதுள்ள சட்டத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில், தேசிய கல்வி நிறுவகத்தை மையமாகக் கொண்ட கட்டமைப்பின் மூலம் கல்வி மறுசீரமைப்புகளை செயல்படுத்துவதில் எதிர்கொள்ளப்படும் சிக்கல்களை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
அதேவேளை, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் அவசியத்தை தமது சங்கம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த FUTA, நகர்ப்புற பாடசாலைகளில் உள்ள மாணவர்களைவிட, கிராமப்புற பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு இத்தகைய கல்வி மறுசீரமைப்புகள் அதிகம் தேவைப்படுவதாகவும் வலியுறுத்தினர்.
கல்வி மறுசீரமைப்புகள் சமூகநீதியை உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

