அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்புக்கு முன்னுரிமை – ஜனாதிபதி உத்தரவு.!!!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அரசாங்கம் பேணும் வலுவான நிதி ஒழுக்கத்தின் காரணமாகவே மக்களுக்கு அதிக அளவில் இழப்பீடுகளை வழங்க முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயிர் சேதங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகளை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக நிறைவு செய்யுமாறும் உத்தரவிட்டார்.
மேலும், இறால் பண்ணையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதுடன், அவர்களுக்காக சலுகை வட்டி கடன் திட்டம் ஒன்றை அமல்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். நிர்மாணத் திட்டங்களை மேற்கொள்ளும்போது, பிரதேச அளவிலேயே அல்லாமல், நாடு முழுவதும் கிடைக்கும் பொருளாதார நன்மைகளையும் கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த அறிவுறுத்தல்கள், இன்று (13) முற்பகல் புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே வழங்கப்பட்டன.
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகளை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி நிறைவு செய்யுமாறும், இழப்பீடு வழங்கும்போது வனப்பகுதியில் பயிரிடப்பட்டதா அல்லது சட்டபூர்வமானதா என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அதே நேரத்தில், வனப்பகுதிகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அனர்த்த நிலைமை காரணமாக மாவட்டத்தில் 627 வீடுகள் முழுமையாகவும், 20,813 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு தேவையான இழப்பீடுகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, மீள்குடியமர்த்தலின் போது அரச காணிகளில் குடியேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அரச காணி வழங்க இயலாத சந்தர்ப்பங்களில், காணி வாங்குவதற்காக வழங்கப்படும் 05 மில்லியன் ரூபாய் உதவித் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும்போது 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டின் உரிமையை உறுதி செய்யும் வகையில் இந்த வேலைத்திட்டம் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.





