பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதம் நீடிப்பு – ஜனவரி 28 முதல் புதிய கட்டளைகள் அமுல்.!!!
நாட்டில் கடந்த நவம்பர் 28 ஆம் திகதியிலிருந்து நடைமுறையில் உள்ள பொது அவசரகால நிலை, மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28 முதல் புதிய அவசரகால கட்டளைகள் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அவசரகால நிலைமையின் நோக்கம், நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்தல், அவசியமான விநியோகங்கள் மற்றும் சேவைகளை பாதுகாப்பது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால கட்டளைகள், தற்போது ஜனவரி 28 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்டு, அதற்குரிய அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு, புதிய அவசரகால கட்டளைகளுடன் இணங்க, முன்னர் நடைமுறையில் இருந்த பல கட்டளைகளும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய கட்டளைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவசரகால கட்டளைகள் அரச அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவற்றுக்கு முரணாக செயல்படும் நபர்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவையும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
சர்வதேச மற்றும் உள்ளூர் நிலவரங்களை கருத்தில் கொண்டு, நாட்டின் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே தற்போதைய நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.