ரோஹிங்கியா அகதிகள் படகு விபத்து – 7 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்.!!!
மலேசியா-தாய்லாந்து எல்லை அருகே ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நேற்று (09) கடலில் மூழ்கிய சம்பவத்தில் பலர் உயிரிழந்ததோடு, இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டு, 13 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர், என மலேசிய கடலோட்ட ஆட்சி அமைப்பு (MMEA) அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேடுதல் மற்றும் காப்பாற்றும் பணிகள் தற்போது தொடர்கின்றன; ஆனால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
மியான்மாரின் புத்திதளங் பகுதியிலிருந்து கடந்த வார இறுதியில் (நவம்பர் 6 அல்லது 7) புறப்பட்ட இந்தப் படகில் சுமார் 300 ரோஹிங்யா அகதிகள் மற்றும் சில பங்களாதேசியர்கள் இருந்தனர்.
அவர்கள் மலேசியாவை அடைய முயன்றபோது, அதிகாரிகளின் கண்காணிப்பைத் தவிர்க்க பெரிய படகிலிருந்து மூன்று சிறிய படகுகளுக்கு மாற்றப்பட்டனர். ஒவ்வொரு சிறிய படகிலும் சுமார் 100 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் ஒன்று லாங்காவி அருகே கடலில் மூழ்கியது, மற்ற இரண்டு படகுகளின் நிலை இன்னும் தெரியவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


