சீனாவின் “New Blueprint, New Horizon” திட்டத்திற்கு – சஜித் பிரேமதாச பாராட்டு.!!!
“New Blueprint, New Horizon” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடம் தொடர்பான நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீன மக்கள் குடியரசின் அபிவிருத்திச் சாதனைகளைப் பாராட்டினார்.
சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடமான “New Blueprint, New Horizon” வெளியீட்டு நிகழ்வு இன்று (24) கொழும்பில் உள்ள ஷாங்க்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது. சீனத் தூதரகத்தின் அழைப்பின் பேரிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திர பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சந்தை அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை சமூக ஜனநாயகக் கொள்கைகளுடன் சீனா எவ்வாறு வெற்றிகரமாக இணைத்துள்ளது என்பதையும், நீதி மற்றும் நியாயத்துடன் செல்வத்தை உருவாக்குவதை எவ்வாறு உறுதி செய்கிறது என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் எடுத்துக்காட்டினார்.
மேலும், வறுமை ஒழிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் மாறிவரும் உலகளாவிய சவால்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் சீனாவின் திறன் ஆகியவற்றில் சீனா காட்டி வரும் வலுவான கவனத்திற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
அத்துடன், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பு உலகளாவிய தெற்கின் கூட்டான குரலை வலுப்படுத்துவதுடன், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கை மேலும் உள்ளடக்கியதாகவும் நியாயமானதாகவும் மாற்றுவதற்கு உதவும் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
சீனாவின் இந்த அபிவிருத்திச் சாதனைகளுக்கும், இலங்கையுடனான அதன் நீண்டகால நட்புறவுக்கும் வாழ்த்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,
“New Blueprint, New Horizon” திட்டம் சீன மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, உலகளாவிய சௌஜன்யம், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என தெரிவித்தார்.












