பேரிடர் பாதிப்பில் இருந்து இலங்கை நிச்சயம் மீண்டெழும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.!!!
பேரிடர் பாதிப்புகளில் இருந்து இலங்கை நிச்சயம் மீண்டெழும் என்றும், இருந்த நிலையைவிட சிறந்த நிலைக்கு நாடு முன்னேறிச் செல்லும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை மீண்டெழுவதற்காக சர்வதேச நாடுகள் தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருவதாக அவர் கூறினார். இலங்கை மீது சர்வதேச சமூகத்துக்கு நிலவும் நம்பிக்கையினாலேயே இவ்வாறான ஆதரவுகள் கிடைக்கப் பெறுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த உதவிகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையை இருந்த இடத்தைவிட சிறந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கே அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்தில் காணப்பட்ட கறுப்பு கரை நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், எதிர்காலத்தில் நாட்டை மேலும் முன்னேற்றும் நோக்குடன் அரசின் செயற்பாடுகள் தொடரும் என உறுதியளித்தார்.