மட்டக்களப்பில் புதையல் தோண்டிய கும்பல் கைது: அரசாங்க அதிகாரி, முன்னாள் இராணுவ வீரர் உட்பட 9 பேர் விளக்கமறியல்.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதையல் தோண்ட முயன்றதாகக் கூறப்படும் குழுவொன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அரசாங்க அதிகாரி மற்றும் முன்னாள் இராணுவ வீரர் உட்பட ஒன்பது பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவக்கொடிச்சேனை பகுதியில் நள்ளிரவு நேரத்தில் ரகசியமாக புதையல் தோண்டியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிலேயே இந்தக் கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பிரதேச செயலக கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் புதையலை கண்டறிய பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஸ்கேனர் இயந்திரம், பூஜைப் பொருட்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி பணிகளுக்குப் பயன்படுத்திய பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.