9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் – 48 வயது நபர் கைது.!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
வத்தளை ஹெதல பகுதியில் சட்டவிரோதமாக வைத்திருந்த 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இலங்கை கடற்படை மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயல்படும் கப்பல் கெமுனு, இலங்கை பொலிஸ் கோனஹேன பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை (17) மேற்கொண்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றது.
சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு முச்சக்கர வண்டி பரிசோதிக்கப்பட்டதில், சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட சுமார் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்கப்பட்டன. இதனுடன் சம்பந்தப்பட்ட 48 வயதுடைய வத்தளை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். குறித்த முச்சக்கர வண்டியும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
