வெள்ளத்தின் பின்னர் மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு; பலர் உயிரிழப்பு – கரைவலைவீச்சு மீனவர்கள் பெரும் அவதி.!!!
(ஜே.கே)
அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் பின்னர் மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கரைவலைவீச்சு மீனவர்கள் இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் சுமார் 15,000க்கு மேற்பட்ட மீன்பிடி குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளன. வெள்ளப்பெருக்கின் பின்னர் அதிக எண்ணிக்கையிலான முதலைகள் குறித்த வாவியில் நடமாடுவதால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர்
கடந்த வாரம் காத்தான்குடி வாவியில் இறந்த நிலையில் இராட்சத முதலையொன்று கரை ஒதுங்கியவுடன் கடந்த மாதம் மண்முனை பாலத்தின் கீழ் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரை இழுத்துச் சென்று உணவாக உட்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது
தற்போது மண்முனை பாலம் உடட்பட மட்டக்களப்பு வாவியின் பல இடங்களில் கரைவலை வீச்சு மீனவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். தோணிகளையோ, படகுகளையோ கொள்வனவு செய்ய தங்களிடம் பணம் இல்லாமையால் கரையில் இருந்தே நாங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் ஆனால் தற்போது முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கரையிலிருந்து மீன் பிடிக்க முடியாமல் அச்சமடைந்த சூழலில் நஷ்டம் அடைந்து வருகின்றோம் என மீனவர்கள் தெரிவித்தனர்
முதலைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதேவேளை தற்போது வீதிகளிலும் இம்மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்


