மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில்: தரம் 3 மாணவர்களின் மகிழ்ச்சியான பிரவேசம் மற்றும் ஆக்கச் செயற்பாட்டுக் கண்காட்சி.!!!
இவ்வாண்டு முதன்மை நிலை ஒன்று (Primary I) இலிருந்து முதன்மை நிலை இரண்டு (Primary II) நிலைக்கு இடமாற்றம் பெறும் தரம் 3 மாணவர்களின் மகிழ்ச்சியான பிரவேசம் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட ஆக்கச் செயற்பாடு மற்றும் கைவினைக் கலை கண்காட்சி, வெள்ளிக்கிழமை மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ALM. றிபாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் தஸ்லிமா றிஸ்வி, மஞ்சந்தொடுவாய் முகைதீன் வித்தியாலயத்தின் அதிபர் HM. தாஜஹான், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இதன்போது, தரம் 3 வகுப்பு மாணவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு கலை மற்றும் கைவினைப் படைப்புகள் கண்காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டன. பெற்றோரின் முழுமையான ஒத்துழைப்புடனும், வகுப்பாசிரியர்களின் தொடர்ச்சியான வழிகாட்டலிலும் உருவாக்கப்பட்ட இவ்வாக்கங்கள், மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் சிந்தனை திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.
நிகழ்வின் இறுதியில், பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் கண்காட்சியை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக இடம்பெற்றன.
மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி வெற்றிகரமாக நடைபெற வழிகாட்டிய ஆசிரியர்கள், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர் மற்றும் நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும், பாடசாலை சமூகம் சார்பாக உளமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.














