சிறிய குழுவாக இருந்து நாட்டை குழப்ப முயற்சி: விமல் வீரவன்சவின் செயற்பாடுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்– கந்தசாமி பிரபு.!!!
சிறிய கூட்டமாக இருந்து கொண்டு மீண்டும் நாட்டை குழப்பும் முயற்சியிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் அவரைச் சூழ்ந்த குழுவினரும் ஈடுபட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (13) மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக நாட்டின் கல்வி அமைப்பில் அடிப்படை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. கடந்த காலங்களில் மாணவர்கள் எதிர்நோக்கிய சவால்கள், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த பின்னர் தொழில் வாய்ப்பின்றி அவர்கள் தவித்து வந்த நிலைமைகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தப் பொறுப்பை கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய ஏற்றுக் கொண்டார்.
மாணவர்கள் எதிர்காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முன்கூட்டியே உணர்ந்து, அவர்களின் கல்வியில் தேவையான மாற்றங்களைச் செய்து, அவர்களை இந்த நாட்டிற்கு தலைமைத்துவம் வழங்கக்கூடியவர்களாகவும், தொழில் வாய்ப்பிற்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களாக அல்லாமல் சிறந்த சமூகப் பாங்குடையவர்களாக உருவாக்குவதே இந்த கல்வி சீர்திருத்தத்தின் பிரதான நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 11 வருட பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்து வெளியேறும் நிலையில், தொழில் வாய்ப்பு இன்றி சமூக சீரழிவுக்கு உள்ளாகும் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதன் காரணமாக, ஆரம்ப கட்டமாக தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகிய வகுப்புகளில் கல்வி சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து வெளியேறும் போது ஒரு தொழில் நிலையை அடையக்கூடிய வகையில் முறைமை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தொழில் கல்வியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உயர் கல்விக்குச் செல்ல முடியாத மாணவர்கள் நேரடியாக தொழில் வாய்ப்புகளுக்குள் நுழையக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் முறை நிறுவனங்களை உருவாக்கும் செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய சூழலில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பெண் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரியவை இலக்காகக் கொண்டு, பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என அவர் கூறினார்.
போராட்டம் சத்தியாகிரகமாகக் குறிப்பிடப்பட்டாலும், நடைமுறையில் அது அவ்வாறான அமைதியான போராட்டமாக இல்லை என்றும், ஊடகங்களுக்குக் காட்டுவதற்காக மட்டுமே சத்தியாகிரகப் போராட்டம் என்ற பெயர் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
விமல் வீரவன்ச பற்றி நாட்டின் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும், மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இன்றும் அவருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் கந்தசாமி பிரபு குறிப்பிட்டார். சமூகத்தை சீரழிக்கும் பல செயற்பாடுகளில் அவர் முன்நின்று செயற்பட்டவர் என்றும் அவர் சாடினார்.
இத்தகைய ஒருவரின் செயற்பாடுகளை மக்கள் எந்நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், குறிப்பாக பெண்கள் அவரது கருத்துகளையும் செயற்பாடுகளையும் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக பல அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், இதனை ஒரு மூடத்தனமான அரசியல் நாடகமாகவே அவர்கள் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒருசில பாடப்புத்தகங்களில் காணப்பட்ட குறைபாடுகளை விசாரித்து, அவற்றைத் திருத்தி மீண்டும் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் பிரதமரால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளை மேற்கொள்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் கூறினார்.
அரசாங்கமாக இந்த நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும், பிரதமர் என்ற பதவியைத் தாண்டி, ஒரு பெண்ணை இவ்வாறு மோசமாக இழிவுபடுத்துவதை எதிர்க்கும் நிலைப்பாட்டிலேயே தேசிய மக்கள் சக்தி இருப்பதாகவும் கந்தசாமி பிரபு மேலும் தெரிவித்தார்.