மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்: கவன ஈர்ப்பு போராட்டம்.!!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று (14) நண்பகல் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்து, அவர் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் டாக்டர் தி. தேவநேசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பல வைத்தியர்கள் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை முன்வைத்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (13) பிற்பகல் முதல் வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக, வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவும் நோயாளர் பராமரிப்பு பிரிவுகளும் வழமை போன்று இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஏனைய சில பிரிவுகளில் வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய தினம் பகல் 12.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்பாக ஒன்றுகூடிய வைத்தியர்கள், கோஷங்கள் எழுப்பியவாறு கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், சுகாதார அமைச்சு இந்த விடயத்தில் தலையிட்டு நியாயமான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் வலியுறுத்தினர்.



