இலங்கை வந்தடைந்தார் பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி.!!!
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி இன்று (17) காலை உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்தடைந்தார்.
தோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-664 என்ற விமானம் மூலம் இன்று காலை 9.11 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார். அவருடன் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த ஏழு உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவும் வருகை தந்துள்ளது.
விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறையில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன உள்ளிட்டோர் துணைப் பிரதமரை உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விஜயத்தின் போது, துணைப் பிரதமர் டேவிட் லாமி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
மேலும், ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய இராச்சியத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அவதானிப்பதும், அந்த வேலைத்திட்டங்களை நேரில் பார்வையிடுவதும் இவரது விஜயத்தின் முக்கிய அம்சங்களாகும்.
இதனுடன், சிறுவர் பராமரிப்புக்கான பூகோள சாசன ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வும் இந்த விஜயத்தின் போது நடைபெறவுள்ளது என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





