கினிகத்தேனையில் பிரேக் செயலிழந்த பேருந்து விபத்து – 80 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.!!!
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த CTB பேருந்து, திடீரென பிரேக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்தில் சிக்கியதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (26) ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில், கினிகத்தேனை கடவல மஹா வாங்குவா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பேருந்து ஒரு வளைவில் செல்ல முயன்ற வேளையில், கட்டுப்பாட்டை நிலைநிறுத்த இரண்டாவது கியருக்கு மாற்றியபோது, திடீரென பிரேக்கிங் அமைப்பு செயலிழந்ததாக பேருந்து ஓட்டுநர், மூன்று பிள்ளைகளின் தந்தையான மகேஷ் சுதர்சன் (49) தெரிவித்தார். உடனடியாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக, சாய்வான பகுதியில் உள்ள ஒரு மலையை நோக்கி பேருந்தை இயக்கி, பெரும் விபத்து ஏற்படாமல் பேருந்தை நிறுத்த முடிந்ததாகவும் அவர் கூறினார்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 80 பயணிகள் இருந்ததாகவும், சம்பவத்தின் பின்னர் பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் இணைந்து, பயணிகளை வேறொரு பேருந்தில் பாதுகாப்பாக அனுப்பி வைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

