கொழும்பில் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம்.!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
அரசின் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், தற்கால அரசு பாதுகாப்பு தேவைகளை முன்னிறுத்தி புதிய சட்டமொன்றை கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்த புதிய சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக சுதந்திரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீதி அமைச்சின் முன்பாக நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை மலையக மக்கள் பிரதிநிதிகள், மலையக சிவில் அமைப்புகள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்த அரசு, வேறு பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பது மக்கள் நம்பிக்கைக்கு எதிரான செயல் என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், மலையக மக்கள் தங்களது சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளுக்காக போராடும் சூழ்நிலைகளிலும் இந்த புதிய சட்டம் பயன்படுத்தப்பட்டு அவர்களின் குரல் அடக்கப்படக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.
அரசு உடனடியாக இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்வரைவினை வாபஸ் பெற வேண்டும் என்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பரந்தளவிலான கலந்துரையாடல்கள் நடத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.




