இலங்கை போக்குவரத்து சபை காத்தான்குடி சாலை – சேவை மேம்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்.!!!
இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி சாலையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பிலும் எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று கடந்தவாரம் காத்தான்குடி சாலையின் முகாமையாளர் ஏ.நஸார்தீன் அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் எஸ்.எம்.ஏ.நஸீர், தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அமைப்பாளரும், காத்தான்குடி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளருமான எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமி ஆகியோருக்கிடையில் இடம்பெற்றது.
காத்தான்குடி சாலையின் வினைத்திறனான செயற்பட்டிற்கு அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள் வதற்கான வசதிப்படுத்தல்களைச் செய்துதருவது எனவும் மிகவிரைவில் இலங்கை போக்குவரத்து சபையின் தவிசாளர் சஜீவ கருணாரத்ன அவர்களை காத்தான்குடி சாலைக்கு அழைத்துவருவது எனவும் இணக்கம் காணப்பட்டது. அத்தோடு காத்தான்குடி சாலையின் பஸ் நடத்துனராகக் கடமையாற்றி மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமான எம்.எஸ்.எம்.றிபாஸ் அவர்களின் குடும்ப நிலைமையினைக் கருத்திற்கொண்டு அவரது மனைவிக்கு காத்தான்குடி சாலையில் வேலைவாய்ப்பொன்றினை வழங்குமாறு பிர்தௌஸ் நழீமி அவர்களினால் இலங்கை போக்குவரத்து சபையின் தவிசாளர் சஜீவ கருணாரத்ன அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் அவருக்கான நியமனமும் வழங்கிவைக்கப்பட்டது.
அதேவேளை பிரயாணிகளின் வசதி கருதி காத்தான்குடி சாலையின் செயற்பாட்டு முகாமையாளர் உவைஸ் அவர்களின் முயற்ச்சியினூடாக காத்தான்குடியினூடாகச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அனைத்து பஸ்களும் காத்தான்குடி பஸ்தரிப்பு நிலையத்தில் தரித்துச்செல்வதற்கான ஏற்பாடுகளும் கடந்த முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 2026/2027 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட நிதிஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி பிரதான பஸ்தரிப்பு நிலைய நிர்மானம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களிடம் கோரிக்கையொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
