உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு; நீதி அமைச்சு விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும்.!!!

நீதி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் உதுமாலெப்பை எம் பி கோரிக்கை.!!!

(கே எ ஹமீட்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் சட்டத்திற்கு முன் நிறுத்தவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாட்டு மக்களிடம் பகிரங்கமாக தெரிவித்தார்.

21 ஆம் திகதி முடிந்தவுடன் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் உயர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பான குற்றவாளிகளுக்கு சட்டத்திற்கு முன் நிறுத்துவார் என அறிவித்தார்.

இதுவரையும் குற்றவாளிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படவில்லை.

எனவே நீதி அமைச்சர் விசேட நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் கத்தோலிக்க சமூகம் பாரியளவில் பாதிக்கப்பட்டது இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகம் தொடர்பான தவறான செய்திகளை பரப்பி ஆட்சிக்கு வருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

எனவே பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்திற்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் தொடர்பான இனவாதத் தலைவர் பயங்கரமாகவே பயங்கரவாதி என தெரிவித்த கருத்து தொடர்பாக நீதி அமைச்சு இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது?

ஆளுங்கட்சியின் பிரதி அமைச்சர் தொடர்பாக தெரிவித்த இனவாதக் கருத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் நமது நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை எவ்வாறு கட்டியெழுப்பப் போகிறீர்கள்? என்பதனை தெரிவிக்க வேண்டும்.

இது தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானயக்கார பதில் அளிக்கையில்….

பிரதி அமைச்சர் தொடர்பாக கருத்து தெரிவித்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இறக்காமத்திற்கான தனியான நீதிமன்றத்தினை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் குற்றவயில் நடவடிக்கை முறைச்சட்டக் கோவை (திருத்தம்) சட்டமூல குழு விவாதம் 23.05.2025 ஆம் திகதியன்று நடைபெற்றது .

இதன் போது இக்குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனது உரையில்….

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இறக்காமப் பிரதேசத்தில் சுமார் 18000 மக்கள் வாழ்கின்றனர். இதில் 94% மான சுமார் 17000 க்கும் மேற்பட்ட மக்கள் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ளனர்.

12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதான இறக்காமப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசமானது 2012 ஆம் ஆண்டு வரை அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தின் கீழ் காணப்பட்டதோடு பின்னர் அது அம்பாறை நீதி நிர்வாக வலயத்தின் கீழ் எவ்வித அறிவித்தலும் இன்றி மாற்றப்பட்டு இருந்தது

சிங்கள மொழியை நீதிமன்ற மொழியாக கொண்ட அம்பாறை நீதி நிர்வாக வலயத்தின் கீழ் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட இறக்காமப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசம் இணைக்கப்பட்டமையானது அப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களது அடிப்படை உரிமையை மீறுகின்ற ஒரு செயலாகும்.

அத்தோடு இப் பிரதேசத்தில் வாழ்கின்ற 94% மான தமிழ் பேசும் மக்கள் அம்பாறை நீதிமன்றங்களில் தமது வழக்கு நடவடிக்கைகளை தமக்கு பரீட்சயமற்ற சிங்கள மொழியில் தாக்கல் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் அத்தோடு வழக்கு நடவடிக்கைகளை கையாள்வதிலும் சிரமப்படுகின்றனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தமிழில் இருந்து சிங்களத்துக்கும் சிங்களத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்வதற்காக வழக்குச் செலவுக்கு மேலதிகமாக பெருந்தொகையான பணத்தை செலவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது

அத்தோடு வழக்கு நடவடிக்கைகளின் போதும் சாட்சியங்களின் போதும் நீதிமன்றின் பெறுமதியான நேரத்தை மொழிபெயர்ப்புக்காக செலவிட வேண்டிய துரதிஷ்டவசமான நிலையும் ஏற்பட்டுள்ளது.

இறக்காமப் பிரதேசமானது புவியியல் ரீதியாக சிங்கள மொழியை நீதிமன்ற மொழியாக கொண்ட அம்பாறை நீதி நிர்வாக வலயத்திற்கும் தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக கொண்ட அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்திற்கும் இடையில் அமையப் பெற்ற பிரதேசமாகும்.

சிங்கள மொழியிலான அம்பாறை நீதி நிர்வாக வலயத்தினுள் இக்கினியாகல, உகன, தமன, மங்கலகம, மத்தியமுகாம்(Central Camp), பக்கியல்ல மற்றும் அம்பாறை ஆகிய பொலிஸ் பிரிவுகள் அடங்குகின்றன.

இதில் தமிழ் பேசுகின்ற மக்களை கொண்ட ஒரே ஒரு இறக்காமப் பிரதேசமானது பொருத்தமற்ற வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியிலான அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தினுள் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய பொலிஸ் பிரிவுகள் மாத்திரம் உள்ளடங்குகின்றன.

எனவே தான் தமிழ் பேசுகின்ற மக்களை கொண்ட இறக்காமப் பிரதேசமானது தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக கொண்ட அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் அல்லது இறக்காமப் பிரதேசத்திற்கான தனியான நீதிமன்றம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை நீதி அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பில் மேல் நீதிமன்றம் உள்ளடங்களாக நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகளை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் 2021 ஆம் ஆண்டு விதந்துரைக்கப்பட்ட அறிக்கையில் மேற்சொல்லப்பட்ட இறக்காமப் பிரதேசமானது அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தின் கீழ் கொண்டுவரப்படுவது தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அம்பாறை நீதிமன்றத்தில் இருந்து அறிக்கையினை பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சர் நீதி அமைச்சின் செயலாளரிடம் பணிப்புரை விடுத்தார்.

Related News

Total Websites Views

Total Views: 181282

Search

விளம்பரங்கள்