மின்னொழுக்கால் போரதீவுப்பற்றில் தீ விபத்து: வீடு சாம்பலானது – உரிமையாளருக்கு தீக்காயம்.!!!
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
குறித்த கிராமத்தைச் சேர்ந்த புவனசிங்கம் – சறோசாதேவி தம்பதியரின் வீட்டே இவ்வாறு தீக்கிரையானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில், வீட்டின் உரிமையாளர் அருகிலுள்ள வீடொன்றில் இருந்ததாகவும், திடீரென வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அயலவர்கள் கூச்சலிட்டதையடுத்து அவர் விரைந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், அப்போது தீ வேகமாகப் பரவி கட்டுப்பாட்டை மீறி எரிந்துகொண்டிருந்தது.
இதன்போது வீட்டிற்குள் செல்ல முயன்ற உரிமையாளரின் முகப்பகுதியில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த பெறுமதியான உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் முற்றாக அழிந்துள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், வீட்டில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து அறிந்ததும், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன், உப தவிசாளர் த. கயசீலன் மற்றும் வட்டார உறுப்பினர் பா. அனோஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், சேத விபரங்களையும் கேட்டறிந்தனர்.
மேலும், களுவாஞ்சிகுடி மின்சார சபை அதிகாரிகள் மற்றும் வெல்லாவெளி பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மின்சாரப் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு முறைகள் தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாமையே இத்தகைய தீ விபத்துகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




