மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு: தளபாடம் மற்றும் கணினி உபகரணங்கள் வழங்கி வைப்பு.!!!
– எம்.ரி.எம். யூனுஸ் –
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஸ்கேன் பிரிவில் நீண்டகாலமாக நிலவி வந்த தளபாட வசதிகள் மற்றும் கணினி உபகரணங்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தளபாடங்கள் மற்றும் கணினி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (27) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் நிதிப்பங்களிப்பில், மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு குழுமத்தின் வேண்டுகோளின் பேரில், ரூபாய் 4 இலட்சம் பெறுமதியான தளபாடங்கள் மற்றும் கணினி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் ஸ்தாபகர் சோழையூரான் (ஜோதி) அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், குறித்த உபகரணங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் திருமதி மைதிலி பாத்லற், விஷேட வைத்திய நிபுணர்களான நிமோஜன், இராஜேந்திரா, மற்றும் கணக்காளர் புவனேஸ்வரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு குழுமத்தின் ஆலோசகர் மாமாங்கராஜா, தலைவர் எம். துஸ்யந்தன் தலைமையிலான சிவில் சமூக உறுப்பினர்கள், பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் கல்விக்கான பொறுப்பாளரும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மோகனதாஸ், பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் வினோத் காந்த், எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஷாஜஹான் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நன்கொடை, ஸ்கேன் பிரிவின் செயல்திறனை உயர்த்துவதுடன், நோயாளிகளுக்கான சேவைத் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக அமையும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.









