கடற்படையின் விஷேட நடவடிக்கையில்: சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 237 பறவைகள் பறிமுதல்; மூவர் கைது!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
யாழ்ப்பாணம், கச்சதீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் புதன்கிழமை (14) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற 237 பறவைகள், அவற்றை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகு மற்றும் மூன்று சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்.
வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் வஸப நிறுவனத்தைச் சேர்ந்த கச்சதீவு கடற்படைப் பிரிவினரால், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகு ஒன்று அவதானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வடக்கு கடற்படை கட்டளையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த டிங்கி படகில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற 237 புறாக்கள், மூன்று சந்தேக நபர்கள் மற்றும் ஒரு டிங்கி படகு ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட டிங்கி படகு மற்றும் பறவைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

