மட்டக்களப்பில் யானை வேலி மின்சாரம் தாக்கி: ஆணும் பெண்ணும் பலி.!!!
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளி பகுதியில் இன்று (29) காலை யானை வேலிக்கு வழங்கப்பட்ட மின்சாரம் தாக்கியதில் ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (48) மற்றும் ஏறாவூர் 5ம் குறிச்சி, வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (43) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணும் உயிரிழந்தவரின் மனைவியும் இன்று காலை மீன் வாங்குவதற்காக புலையவெளி ஆற்றுப்பகுதிக்கு சென்ற போது, வயல் பகுதியில் நில மட்டத்தில் அமைந்திருந்த யானை வேலிக்கான மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் போது தமிழ்ச்செல்வி செல்வகுமார் நீர் நிறைந்த பகுதியில் விழுந்துள்ளதாகவும், உயிரிழந்தவரின் மனைவி மேட்டு நிலப்பகுதியில் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நீரில் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற போது செல்வம் கர்ணனும் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளார்.
அயலவர்கள் உடனடியாக யானை வேலிக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை துண்டித்து, இருவரையும் முச்சக்கரவண்டியில் செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவரின் சடலங்களும் தற்போது செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.