மட்டக்களப்பில் 2534 மில்லியன் பெறுமதியில்: 48 வீதிகள் புதுப்பிப்பு பணிகள் தொடங்கியது.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2534 மில்லியன் பெறுமதியான வீதி அபிவிருத்தி திட்டங்களின் ஆரம்ப விழா நேற்று (25) நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, போக்கு வரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் நிதி உதவியில், போக்கு வரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து நடைபெறுகிறது.
திட்டத்தின் மூலம் 48 வீதிகள், 52.23 கிலோமீட்டர் நிலம் கொண்ட வீதிகள் புதிதாக அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன்படி களுவன்கேணி – 2.10 கி.மீ, உப்போடை ஈஸ்ட்லகூன் வீதி – 2.38 கி.மீ, குறிஞ்சாமுனை பாவற்கொடிச்சேனை வரையிலான வீதி – 6 கி.மீ, களுமுந்தன் வெளியில் வீதி – 2.64 கி.மீ என்பனவாகும்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் “மட்டக்களப்பின் அடையாளமாக விளங்கும் கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் உள்ள இந்த வீதிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும். மேலும், மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அமைத்து தொழில் வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.” என்றார்.
போக்கு வரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கூறியதாவது, 150க்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, மார்ச் மாதம் 15க்குள் இந்த வீதிகளை நிறைவு செய்வது முக்கிய நோக்கம் என்றார்.
நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



