புதிய காத்தான்குடி அம்னா கிட்ஸ் கொலேஜில்: வித்தியாரம்ப நிகழ்வு.!!!
— எம்.ரி.எம்.யூனுஸ் —
கல்வித் துறையில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ள புதிய காத்தான்குடி அம்னா கிட்ஸ் கொலேஜின் வித்தியாரம்ப நிகழ்வு இன்று (06) வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் எம். ரி. எம். யூனுஸ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சட்டத்தரணியும், சிரேஷ்ட உளவளத்துணையாளருமான முகைதீன் சாலி LLB பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அவர் தனது உரையில், இன்றைய சமூக சூழலில் பிள்ளை வளர்ப்பு தொடர்பான சவால்கள், குழந்தைகளின் மனநல வளர்ச்சி, பெற்றோரின் பொறுப்புகள், மற்றும் முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், பெற்றோர்கள் மற்றும் முன்பள்ளிகளுக்கிடையிலான நெருக்கமான தொடர்பு, குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கும், ஒழுக்க வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிப்பதாகவும், இரு தரப்புகளுக்கிடையிலான தொடர்ச்சியான கலந்துரையாடலும் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
புதிய காத்தான்குடி அம்னா கிட்ஸ் கொலேஜின் ஆரம்ப நிகழ்வு, காத்தான்குடி பிரதேசத்தில் ஆரம்பக் கல்வி வளர்ச்சிக்கான ஒரு புதிய அடையாளமாகவும், குழந்தைகளின் முழுமையான மன, உடல் மற்றும் ஒழுக்க வளர்ச்சியை முன்னிறுத்தும் கல்வி நிலையமாகவும் உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பிரதம அதிதி தனதுரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் 15 புதிய மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
அம்னா கிட்ஸ் கொலேஜ் அதிபர் அகிலா ஆப்தீன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்பள்ளி பாலர் பாடசாலையின் நிர்வாகிகள், ஆசிரியைகளான முகைசா சியாம், செல்வி அம்னா ஆப்தீன், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.




















