உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

1897ஆம் ஆண்டிலிருந்து இயங்கிய உள்ளூராட்சி சபையை 1987முதல் இல்லாமல் செய்யப்பட்டதன் மர்மம் என்ன?

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விடயம் சம்பந்தமாக பலரும் பலவிதமாக நோக்குகின்றனர். பாராளுமன்றத்திலும் பலவிதமாக பேசப்படுகின்றது. ஆனால் உண்மை நிலை வேறு.

சிலர் கல்முனைப் பிரச்சினையும் இதுவும் ஒன்று என்று கூறி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட
முனைகின்றனர்.

கல்முனை உப பிரதேச செயலக பிரச்சினை என்பது ஒரு நிருவாகம் சார்ந்த பிரச்சினை.
அடுத்தடுத்த இரண்டு வீதிகளில் சுமார் 100மீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமையப் பெற்றுள்ள பிரதேச செயலகம் மற்றும் உப பிரதேச செயலகங்களின் பிரச்சினை.

ஆனால் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை என்பது, ஒரு நூற்றாண்டு காலம் நடைமுறைப் படுத்தப் பட்டது மட்டுமல்ல, 2001ஆம் ஆண்டில் இருந்து தனியான பிரதேச செயலகத்தையும், எல்லையையும் கொண்ட ஒரு தனியான பிரதேச மக்கள் தங்களது அன்றாட தேவைகளை, மற்றும் ஏனைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கானது.
கடந்த காலங்களில் அரசியல் வாதிகளினால் பலவந்தமாக பறிக்கப்பட்ட உள்ளூராட்சி சபையை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

2020.02.14ஆம் திகதி உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அவர்களினால் வெளியிடப்பட்ட சட்டரீதியான வர்த்தமானி அறிவித்தல் அமுல்படுத்தப் படாமல் கிடப்பில் போடப்பட்டது சம்பந்தமான பிரச்சினை.

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை சம்பந்தமாக முதலில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள், தொடர்ந்து பலர் பாராளுமன்றில் தனியான உள்ளூராட்சி சபை சம்பந்தமாக பேசியுள்ளனர் என்பதனை நன்றியுடன் மதிக்கின்றோம்.

இன்றைய அரசின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் உண்மையான நிலையினை 2018ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் முன்வைத்து பேசியுள்ளார். அண்மையிலும் பேசியுள்ளார். அது சம்பந்தமான பல ஆவணங்கள் விளக்கங்களை நாம் அன்று நேரில் சென்று சந்தித்து அவருக்கு வழங்கியிருந்தோம்.

கரைவாகு வரலாற்றில் கல்முனையும், சாய்ந்தமருதும் உள்ளூராட்சி விடயத்தில் தனித் தனியான பிரதேசங்கள்.

1897ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கல்முனை, சாய்ந்தருது உட்பட சம்மாந்துறை, காத்தான்குடி மற்றும் ஏறாவூர்பற்று போன்ற ஐந்து பிரதேசங்கள் கிழக்கு மாகாணத்தில் தனித் தனி சனிடரி சபைகளாக பிரகடனப் படுத்தப்பட்டு இயங்கி வந்தது.
தொடர்ந்து வந்த பல உள்ளூராட்சி வர்த்தமாணிகளும் சாய்ந்தமருது பிரதேசத்தை தனியாகவே பிரகடனம் செய்தது.

1980களில் அறிமுகப் படுத்தப் பட்ட மாவட்ட அபிவிருத்திச்சபை உப செயலகம் கூட சாய்ந்தமருதில் தனியாக இயங்கியது.

1987ஆண்டு பிரதேச சபைகள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இப்புதிய சட்டம் தனியாக இயங்கிய ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பிரதேச சபைகள் உருவாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது.

ஆனால் அன்று எமது பிரதேசத்தில் முழு அதிகாரத்துடன் இருந்த அரசியல் வாதி தனது அரசியல் செல்வாக்கை தக்க வைப்பதற்காக முழு தேர்தல் தொகுதியையும் ஒன்றிணைத்து, கல்முனையுடன் சாய்ந்தமருது பிரதேசத்தையும் இணைத்து கல்முனை பிரதேச சபையைப் பிரகடணப் படுத்தினார். பின்பு அது நகர சபை , மற்றும் மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டது.

அன்றிலிருந்து சாய்ந்தமருது மக்கள் தொடர்ந்து தனியான சபைக்கான வேட்கையுடன் இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

2014/2015ஆம் ஆண்டுகளில் இப்பிரச்சினை அரசியல்மயமாக்கப் பட்டு அன்றிருந்த உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் நான்கு சபைகள் கொண்டுவருவதாக கூறிய நிலையில் அதனை எதிர்த்த எம்.பீ. ஹரிஸ் போன்றோர், பின்னர் மு .கா தலைவர், அன்றைய, இன்றைய செயலாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, சாய்ந்தமருது பள்ளிவாசல் மூலம் தனியான நகர சபைக்கான விண்ணப்பத்தினை அன்றைய உள்ளூராட்சி அமைச்சரிடம் சமர்ப்பித்தனர். பின்னர் தொடர்ச்சியாக 50க்கு மேற்பட்ட சந்திப்புக்களும் நடைபெற்று இறுதியில் ஏமாற்றம் அடைந்த மக்கள் ஒன்றிணைந்து பள்ளிவாசல் தலைமையில் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 30,31 மற்றும் நவம்பர் 1முதலாம் திகதி வரை பாரிய எழுச்சிப் பேரணி ஒன்றை நடாத்தியது எல்லோரும் அறிந்த விடயம்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் சாய்ந்தமருது வட்டாரங்கள் அனைத்தும் சுயேட்சைக் குழுவின் வசமானது. அத்துடன்
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு பிரதான வேட்பாளர்களையும் அணுகினோம் ஒருவர் மட்டுமே நேரம் ஒதுக்கினார்.
அந்த வகையில் பொதுஜன ஐக்கிய முன்னணி முக்கியஸ்தர் பசில் ராஜபக்ஷ அவர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
அதன்படி ஜனாதிபதி, பொதுத் தேர்தலில் மேற்படி கட்சியுடன் இணைந்து செயல்படுவது புதிய ஜனாதிபதி வென்றவுடன் சாய்ந்தமருது நகர சபையை பிரகடனம் செய்தல்.
அந்த வகையில் புதிய ஜனாதிபதி வென்ற சில காலங்களில் பசில் ராஜபக்ஷ அவர்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, ஏனென்றால் ஏற்றுக் கொண்டதற்கிணங்க வாக்குகள் கிடைக்கவில்லை என்றும் சபை கொடுக்கவேண்டாம் என்று எமதூரைச் சேர்ந்த சில அரசியல் வாதிகள் அவரிடம் கூறி உள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்
விமலவீர திஸாநாயக்க அவர்கள் பிரதமர் தலைமையில் அம்பாறை மாவட்ட நிருவாகப் பிரச்சினை சம்பந்தமான கூட்டத்திற்கு பள்ளிவாசல் சார்பாக நான் உட்பட ஐந்து பேர் கலந்து கொள்ள அனுமதி பெற்றுத் தந்தார்.

கூட்டம் அலறி மாளிகையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 2020ஜனவரி மாதம் நடுப் பகுதியில் நடைபெற்றது. அன்றைய உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் உட்பட, ஹரிஸ் எம்.பீ,
மாவட்ட என்.பிக்கள், ஆளுநர், பிரதம செயலாளர், அம்பாறை அரச அதிபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் உட்பட பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அத்துடன் சாய்ந்தமருது தனியான பிரதேச செயலக எல்லையை கொண்டுள்ளதால் அதற்கான சபையை வழங்க முடியும் என பிரதமர் உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கிழக்கு வாசலில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் என்னை மேற்படி விடயத்தில் இணைந்து அவருடன் செயற்படுமாறு கூறினார். அத்துடன் நானும் 2020 ஜனவரி 31ஆம் திகதி முதல் முன் ஓய்வை அறிவித்துவிட்டு அவருடன் சேர்ந்து செயற்பட்டேன்.

பாரிய முயற்சியின் பின்னர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களின் ஆலோசனையின்படி சாய்ந்தமருது பிரதேச செயலகம் அமைந்துள்ள எல்லைகளுக்கு, அன்றைய உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களின் ஒப்பத்துடன் 2020.02.14ஆம் திகதி நகரசபை கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் செய்யப்பட்டது.
அரசாங்க அச்சக இணையத்தளத்திலும் பதிவிடப் பட்டிருந்தது.
ஆனால் 2020.02.18ஆம் திகதி மீண்டும் அது இல்லாமல் செய்யப்பட்டது.
அதே திகதியில் போடப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில் இறுதித் தீர்ப்பாக, அவரால் மன்றாடப்பட்ட விடயம் தொடர்பில் வழங்கப் பட்டுள்ளதால் வழக்கை முடிவுறுத்து வதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி அறிவித்ததை தொடர்ந்து வழக்கு நீதிபதிகளால் முடிவுறுத்தப்பட்டது.

நாடளாவிய ரீதியில் சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் சஹரானுக்கும் முடிச்சுப் போட்டு, கைமாறு செய்யப் பட்டது என்ற கட்டுக் கதைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சரவைக் குறிப்பு ஒன்றை 2020ஆண்டு மார்ச் மாதம் அளவில் அன்றைய அமைச்சர் அவர்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார்.
அக்குறிப்பில் சாய்ந்தமருது நகர சபை முறையாக வழங்கப்பட்டது என்பதை உறுதிப் படுத்தியுள்ளார்.

மேற்படி வர்த்தமானி அரசாங்க அச்சக இணையத் தளத்திலிருந்து நீக்கப் பட்டமை தொடர்பாக கேட்கப் போதெல்லாம் கிழக்குவாசல் ஒரே பதிலாக தேர்தல் நடக்கும் சந்தர்பத்தில் சாய்ந்தருதுக்கு தனியாக தேர்தல் நடக்கும் என்று மட்டுமே கூறப்பட்டது.

இறுதியாக நீண்ட நாள் கோரிக்கையின் பின்னர் தேர்தலுக்கு திகதி குறிப்பிடுவதற்கு ஒருசில வாரங்களுக்கு முன்னர் அன்றைய பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் உள்ளூராட்சி அமைச்சராக இருந்த நிலையில் அதாஉல்லா எம்.பீ அவர்கள் ஒரு ஆளும் கட்சி எம்.பியாக சந்தித்தபோதுதான் விளங்கியது, முன்னர் முயற்சித்து இருந்தால் பெற்றிருக்க முடியும். எங்களது விடயம் வேண்டுமென்றே இளுத்தடிக்கப் பட்டடுள்ளதனை அறியமுடியும். 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் கணக்கில் எடுக்கப் படாமல் கல்முனைக்கு மாத்திரம் கோரப்பட்டது.

எங்களுக்கு வழக்குத் தாக்கல் செய்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. கல்முனை மாநகர சபைக்கான நோமினேஷன் முடிந்திருந்தால் எல்லாம் முடிந்திருக்கும்.
எனவே நாங்கள் அவசரமாக வழக்கை தாக்கல் செய்தோம். ஆனால் பள்ளிவாசல் வழக்குத் தாக்கல் செய்வதாக கூறினாலும் இறுதி நேரத்தில் கைவிட்டது என்பது உண்மையில் அந்த விடயத்தில் இருந்து நழுவிக் கொண்டது.

சாய்ந்தமருது நகர சபை என்பது முறையான அடிப்படையில் சகல ஆவணங்களும் பெறப்பட்டு, உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சினால் பிரகடனப் படுத்தப் பட்டது. பள்ளிவாசலின் முறையான விண்ணப்பத்துடன், பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட அரச அதிபர், மற்றும் மாகாண சபையின் அங்கீகாரம், அத்துடன் அரச அதிபர் தலைமையிலான குழுவின் சிபார்சும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் 2018ஆம் ஆண்டு அன்று அமைச்சராக இருந்த பைஸர் முஸ்தபா அவர்கள் ஒரு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தார். அதன்படி தனியான பிரதேச செயலக எல்லையைக் கொண்ட சாய்ந்தமருது பிரதேசத்திற்கு நகர சபை வழங்குவதும், ஏனைய பிரதேசங்கள் சம்பந்தமாக ஒரு குழுவை நியமித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளல்.

மேற்படி விடயங்களை கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம் கல்முனை மாநகர சபைக்ககான
நோமினேஷனை இடைநிறுத்தியது.
இறுதியாக
கடந்த பெப்ரவரி 24 திகதிய அமர்வில் எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதிவரை மீண்டும் அதே இடைநிறுத்ததுடன் பிற்போடப்பட்டுள்ளது.

எனவே மேற்படி சபை சம்பந்தமாக உச்ச நீதிமன்ற தீர்புக்காக உள்ள நிலையில் எந்த அரசியல் கருத்துக்களும் அவசியமற்றது என்பது எனது கருத்து.

ஏ.எல்.எம் சலீம் (SLAS,SLEAS)
முன்னால் இலங்கை சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரி
முன்னால் சாய்ந்தமருது பிரதேச செயலாளார்

Related News

Total Websites Views

Total Views: 194563

Search

விளம்பரங்கள்