நாடு முழுவதும் விசேட சோதனை: ஒரே நாளில் 578 பேர் கைது.!!!
நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களை ஒழிக்கும் நோக்கிலும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விசேட சோதனை நடவடிக்கைகளின் கீழ், நேற்று (19) ஒரே நாளில் 578 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்னெடுக்கப்பட்ட பாரிய சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது, நாடு முழுவதும் 29,504 பேர் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் போது, பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 16 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 282 பேர் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த 177 பேர் ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
இதனைத் தவிர, போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளில், குடிபோதையில் வாகனம் செலுத்திய 427 பேர் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதர போக்குவரத்து குற்றங்களுக்காக 4,384 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் குற்றச்செயல்கள் மற்றும் போக்குவரத்து விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.