கடல் வழி மருந்து கடத்தலுக்கு கடற்படை முற்றுப்புள்ளி: 108,480 மாத்திரைகள் பறிமுதல்.!!!
(கற்பிட்டி நிருபர் – சியாஜ்)
கற்பிட்டி கந்தக்குளி கடல் பகுதியில், திங்கட்கிழமை (12) இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சுமார் ஒரு லட்சத்து எட்டாயிரத்து நானூற்று எண்பது (108,480) மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
வட மத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படை கப்பல் “விஜயா”-வின் கந்தக்குளி கடற்படைப் பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் கந்தக்குளி கடல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு (02) படகுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அந்தப் பரிசோதனையின் போது, கடத்தல்காரர்களால் கடல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பெருமளவான மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இம்மாத்திரைகள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்டவை என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட மருந்து மாத்திரைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம், கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட பதினாறு லட்சத்து எண்பத்து மூவாயிரத்து எழுநூற்று இருபத்தி இரண்டு (1,683,722) மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் மற்றும் மருந்து கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முறியடிப்பதில், இலங்கை கடற்படை தொடர்ந்து உறுதியான பங்களிப்பை வழங்கி வருவதாகவும், இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தீவிரப்படுத்தப்படும் எனவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

