தெற்கு கடலில் கடற்படை அதிரடி நடவடிக்கை: 270 கிலோ ஹெரோயின் மற்றும் ஐஸ் பறிமுதல் – 11 பேர் கைது.!!!
தெற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கடற்படை நடவடிக்கையின் போது, சுமார் 270 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் (Methamphetamine) போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெருமளவு போதைப்பொருள் தொகையை ‘தெஹிபால’ என அழைக்கப்படும் நபர் நாட்டுக்குள் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையினர் இந்தச் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன் முதற்கட்டமாக, தெற்கு கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு நெடுநாள் மீன்பிடிப் படகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அந்தப் படகிலிருந்து சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் ஐந்து (05) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அதே கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நெடுநாள் மீன்பிடிப் படகும் கடற்படையினரின் பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அந்தப் படகிலிருந்து மேலும் ஆறு (06) சந்தேகநபர்கள், இரண்டு (02) செய்மதி தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதுடன், அதில் சுமார் 70 கிலோ கிராம் போதைப்பொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் நாளை (25) கரைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொண்டு விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் வலுப்படுத்தப்படவுள்ளன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.