ஓன்லைன் போதை வியாபாரி கைது: 5 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு.!!!
மிகவும் நுணுக்கமான முறையில் ஓன்லைன் மூலம் போதை வியாபாரம் நடத்தி வந்த மாவடிச்சேனையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் வாழைச்சேனை பொலிஸாரால் நேற்று (04) கைது செய்யப்பட்டார்.
வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப.பொலிஸ் பரிசோகதர் கே.எஸ்.பி. அசங்க தலைமையிலான திரு தினேஷ் (8656), திரு திலீபன் (100825), வீரசிங்க (39210), திரு ரிஷோ மற்றும் திரு விஜி ஆகியோர் இணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 5 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், இவர் போதைப்பொருள் கொள்வனவு செய்தோர் மற்றும் வினியோகத்தர்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
புலனாய்வு தகவலின் படி, குறித்த நபர் நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து, ஓன்லைன் மூலம் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்; பல இளைஞர்களின் வாழ்க்கையை பாதித்து, சமூகத்திற்கு தீங்கு விளைவித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரும், சான்றுப்பொருட்களும் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜராக, விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன. வாழைச்சேனை பொலிசார் இதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.