உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

ஒரு போட்டியைக் கூட வெற்றி பெறாத பாகிஸ்தானுக்கு அதிக பரிசுத் தொகை; காரணம் என்ன தெரியுமா?

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இந்த தொடரின் முடிவில் கோடிக்கணக்கான ரூபாயை பாகிஸ்தான் அணி பரிசாகப் பெற உள்ளது.

2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சாம்பியன் அணியாக இருந்தும், தொடரை நடத்தும் அணியாக இருந்தும் இந்த முறை குரூப் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. குரூப் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடியது.

இதில், நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்தது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதனால், ஒரு புள்ளி மட்டுமே பாகிஸ்தானுக்கு கிடைத்தது. ஆக மொத்தத்தில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூட அந்த அணி வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு 2.31 கோடி ரூபாய் பரிசாகக் கிடைத்துள்ளது. இது எப்படி சாத்தியம்? ஏன் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத அணிக்கு இத்தனை பெரிய பரிசுத்தொகை? என சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் பரிசுத்தொகை முன்பே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கான ஒப்பந்தமும் முன்பே ஏற்படுத்தப்பட்டு விட்டது.

இந்தத் தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளுக்கும் பங்கேற்புத் தொகையாக ரூபாய் 1.09 கோடி வழங்கப்பட உள்ளது. அதன்படி, இந்தத் தொடரின் குரூப் ஏ பிரிவில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு அந்தப் பங்கேற்புத் தொகை வழங்கப்பட உள்ளது.

அத்துடன், இந்தத் தொடரில் இரண்டு குரூப் பிரிவுகளின் புள்ளிப் பட்டியலை சேர்த்து ஒட்டுமொத்தமாக ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இந்திய மதிப்புப்படி ரூபாய் 1.22 கோடி வழங்கப்பட உள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பெறுவதாகவே வைத்துக் கொண்டாலும், அந்தப் பரிசுத் தொகை அந்த அணிகளுக்குக் கிடைக்கும். ஆக மொத்தத்தில், குறைந்தபட்சம் 2.31 கோடி என்ற பரிசுத்தொகையை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பெற உள்ளன.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒட்டுமொத்தமாக 60.25 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வெற்றி பெறும் அணிக்கு அதிகபட்சமாக 19.56 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இரண்டாவதாக வரும் அணிக்கு 9.78 கோடி ரூபாய் வழங்கப்படும்.

அரையிறுதியில் தோல்வியடைந்த இரண்டு அணிகளுக்கு 4.89 கோடி ரூபாய் வழங்கப்படும். இவை தவிர, அந்த அணிகள் அனைத்துக்கும் பங்கேற்புத் தொகையான 1.09 கோடி ரூபாயும் கிடைக்கும். ஆனால், எப்படிப் பார்த்தாலும் கோப்பை வெல்லும் அணிக்குக் கொடுக்கும் பரிசுத் தொகையை விட ஐபிஎல் தொடரில் சில வீரர்கள் அதிக சம்பளத்தைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Total Websites Views

Total Views: 194784

Search

விளம்பரங்கள்