பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்; கட்சித் தலைவர்கள் – உறுப்பினர்கள் கலந்துரையாடல்.!!!
நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையே விஷேட கலந்துரையாடல் இன்று (20) காலை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இச்சந்திப்பில் கயந்த கருணாதிலக, சிவஞானம் ஸ்ரீதரன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், கே. காதர் மஸ்தான், திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ஜே.சி. அலவத்துவல, கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, டாக்டர். பி. சத்தியலிங்கம், நிஸாம் காரியப்பர் ஆகிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இச்சூழ்நிலையில் நாட்டு மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொதுச் சேவையை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் இங்கு சுட்டிக் காட்டினர்.
இது தொடர்பாக மீண்டும் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக காலையில் சபாநாயகரைச் சந்திக்க எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பணிகளை பாராளுமன்றத்திலும், வெளியிலும், சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் மேற்கொள்ளக்கூடியவொரு சூழலை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் சபாநாயகருக்கு உள்ளதை வலியுறுத்த வேண்டும் என்று உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினர்.
எழுந்துள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு பொலிஸ்மா அதிபரையும், பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளரையும் உடனடியாக பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் கோர வேண்டும் என்று கட்சித் தலைவர்களால் முடிவு செய்ய்யப்பட்டுள்ளது. இதன்படி சபாநாயகரைச் சந்தித்த கட்சித் தலைவர்கள் குறித்த முடிவுகள் மற்றும் யோசனைகள் குறித்து சபாநாயகருக்கு தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



