உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குகளை விசாரிக்க விசேட நீதிமன்றம்.!!!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான நீதித்துறை விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில், விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விசேட நீதிமன்றத்தின் செயற்பாடுகள், கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலக்கம் C-76 எனும் முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (12) அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
நீதிமன்றங்களை அமைப்பதற்காக நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே, இந்த உத்தரவு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 2025–2029 ஊழல் எதிர்ப்புச் செயல் திட்டத்தின் கீழ், வழக்குகளை விரைவாகக் கையாள்வதற்காக கொழும்பு 07 பகுதியில் அமைந்துள்ள நான்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் தற்காலிகமாக நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.