பாடசாலை மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைத் திட்டம்.!!!
(பாறுக் ஷிஹான்)
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் கமுகமு எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் தரம் 1, 4 மற்றும் 7 மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலை மருத்துவ பரிசோதனைத் திட்டம் இன்று சிறப்பாக நடைப்பெற்றது.
இந்நிகழ்வு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்களின் உடற்திணிவு, வாய்ச்சுகாதாரம், இருதய சம்பந்தமான குறைபாடுகள், தோல் நோய்கள், பேச்சுத் திறன், கேட்கும் திறன், விசேட நடத்தைகள், நுரையீரல் நிலை மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இம்மருத்துவ பரிசோதனைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை பற்சிகிச்சையாளர் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் ஆகியோர் பங்கேற்று, தங்களது சேவைகளை வழங்கினர்.
பரிசோதனைகளின் போது மாணவர்களிடையே காணப்பட்ட சில உடல்நலக் குறைபாடுகள் இனங்காணப்பட்டதுடன், அவை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டம், மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கவும், ஆரம்ப நிலையில் நோய்களை கண்டறியவும் முக்கியமானதாக அமைந்தது என கல்வி மற்றும் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.



