கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் ஏற்றிச் சென்ற: முச்சக்கர வண்டியில் திடீர் தீ விபத்து.!!!
(நடராஜா மலர்வேந்தன்)
பசறை பகுதியில் கல்வி பொது தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்கான வினாத்தாள்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கிய சம்பவம் புதன்கிழமை (18) இடம்பெற்றது.
பரீட்சை கடமைக்காக வினாத்தாள்களுடன் முச்சக்கர வண்டியில் மூன்று பெண் ஆசிரியர்கள் பயணித்திருந்ததுடன், மேலும் ஒருவரான ஆசிரியர் வண்டியை செலுத்தியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வினாத்தாள்கள் பரீட்சை நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், முச்சக்கர வண்டியில் திடீரென புகை எழுந்ததை கவனித்த பின்னால் வந்த இலங்கை மின்சார சபை-க்கு சொந்தமான லொறியில் பயணித்த பணியாளர்கள் உடனடியாக வாகனத்தை நிறுத்தச் செய்துள்ளனர். பின்னர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், வண்டியில் இருந்த ஆசிரியர்களையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு, பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை நிலையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், மீளப் பெற்றுக் கொள்ளவும் உரிய வாகன ஒழுங்குகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம் என கல்வி வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.