சம்மாந்துறை உப-டிப்போவை மீள இயங்க வைக்க விரைவான நடவடிக்கை – போக்குவரத்து சபை தலைவர் உறுதி.!!!
● போக்குவரத்து சபை தலைவருடன் எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி. சந்திப்பு.
கே.எச். ஹமீட்
இலங்கை போக்குவரத்து சபையின் சம்மாந்துறை உப-டிப்போவை மீண்டும் சம்மாந்துறையிலேயே இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் திரு. சஞ்சீவ மற்றும் பதில் செயலாற்று முகாமையாளர் திரு. அதுல ஆகியோரை இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை காரியாலயத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடல் மேற்கொண்டார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் திரு. பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில், சம்மாந்துறை உப-டிப்போவை மீள சம்மாந்துறையில் இயங்க வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்திருந்த போதிலும், இதுவரை நடைமுறை ரீதியான எந்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என எம்.பி. எம்.எஸ். உதுமாலெப்பை கவலை வெளியிட்டார்.
இதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களில், சம்மாந்துறை உப-டிப்போவை மீண்டும் சம்மாந்துறையில் இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் திரு. சஞ்சீவ உறுதியளித்தார்.
இத்தீர்மானம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், சம்மாந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.