பங்களாதேஷ் நீக்கத்தால் டி20 உலகக்கிண்ணத்தில் குழப்பம்: பாகிஸ்தானும் விலகுமா?
2026 டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் அணி உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொடரில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்தும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவுக்குச் செல்ல மறுத்த பங்களாதேஷ் அணியை, அட்டவணையை ஏற்க வேண்டும் அல்லது தொடரிலிருந்து விலக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஐ.சி.சி அணுகியிருந்தது. ஆனால் பங்களாதேஷ் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததைத் தொடர்ந்து, அவர்களைத் தொடரிலிருந்து நீக்கி ஸ்காட்லாந்து அணியைச் சேர்ப்பதாக ஐ.சி.சி இன்று அறிவித்தது.
இந்த முடிவை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி, ஐ.சி.சி இந்தியாவுக்குச் சாதகமாக இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
பங்களாதேஷ் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
“பங்களாதேஷிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டுக்கு மட்டும் விதிகள் தளர்த்தப்பட்டு, மற்ற நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்தார்.
உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து, பாகிஸ்தான் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் நக்வி குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் ஐ.சி.சி-க்கு அல்ல, அரசாங்கத்திற்கே கட்டுப்படுவோம். பிரதமர் நாட்டிற்கு திரும்பியதும் இறுதி முடிவு அறிவிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரமாக, இந்தியாவிலிருந்து போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரிய பங்களாதேஷிற்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்கி வந்தது. கடந்த வாரம் நடைபெற்ற ஐ.சி.சி கூட்டத்தில், பங்களாதேஷின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்த ஒரே நாடாக பாகிஸ்தான் இருந்தது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ள இத்தொடரில், பங்களாதேஷின் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அறிவுறுத்தலின் பேரில், 2026 ஐ.பி.எல். குழாமிலிருந்து பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜனவரி 3ஆம் திகதி உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் விளையாடுவது பாதுகாப்பற்றது என பங்களாதேஷ் தெரிவித்திருந்தது.
பங்களாதேஷின் கோரிக்கையை நிராகரித்த ஐ.சி.சி, தொடரிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் அரசாங்கம் விளையாட வேண்டாம் என முடிவெடுத்தால், 22வது அணியை சேர்க்க வேண்டிய சூழல் உருவாகும் என நக்வி எச்சரித்துள்ளார்.
இதனால், 2026 டி20 உலகக்கிண்ணத் தொடர் பெரும் அரசியல் மற்றும் நிர்வாக சர்ச்சைகளுக்குள் சிக்கியுள்ளதாக விளையாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.